மறைமலை அடிகள் விழாவில் திருமாவளவன் உரை

திங்கள், 9 நவம்பர், 2009

தமிழ் மாதப் பெயர்களை நாம் தமிழில் எழுதுவோம் வருக.

தமிழ் மாதப் பெயர்களை நாம் தமிழில் எழுதுவோம் வருக.

வடமொழிப் பெயர் - தமிழ்ப்பெயர்

  • தை - சுறவம் ( 30 ) ( 14 jan - feb 12 )
  • மாசி - கும்பம் (30 ) ( 13 feb - 14 mar )
  • பங்குனி - மீனம் ( 30 ) ( 15 marc - 13 Apr )
  • சித்திரை - மேழம் (31 ) (14 Apr - 14 May )
  • வைகாசி - விடை (31) (15 May - 14 Jun )
  • ஆனி - ஆடவை (32 ) ( 15 Jun - 16 Jul )
  • ஆடி - கடகம் ( 31 ) ( 17 Jul - 16 Aug )
  • ஆவணி - மடங்கல் (31 ) (17 Aug - 16 Sep )
  • புரட்டாசி - கன்னி (31) ( 17 Sep - 17 oct )
  • ஐப்பசி - துலை ( 30 ) (18 oct - 16 Nov )
  • கார்த்திகை - நளி ( 29 ) ( 17 Nov - 15 Dec )
  • மார்கழி - சிலை ( 29 ) ( 16 Dec - 13 jan )
நாம் ஒவ்வொரு திங்களும் பயன்படுத்தும் திங்கள் பெயர்கள் தமிழாக இல்லை என்பதைத் தாங்கள் அறிவீர்களா? தூயதமிழ் முறைப்படி அவற்றை மேற்கண்டவாறுதான் எழுத வேண்டும். வடமொழியை அகற்றி நம் அன்னைத் தமிழை வாழ்விக்கும் எண்ணமுடைய தமிழர்கள் அனைவரும் இத்திங்கள் பெயர்களைத் தூயதமிழிலேயே எழுதி வருங்கின்றனர். தமிழைச் சீரழித்து வடமொழியைக் கலந்து எழுதும் மனப்போக்கு அடிமை உணர்வு கொண்ட தமிழரிடத்தும் பகை உள்ளம் கொண்ட தமிழர் அல்லாரிடத்தும் மிக்கிருந்த கரணியத்தால் தமிழில் அனைத்துத் துறைகளிலும் ஒருகாலத்தில் வடசொற்கள் வரைதுறையின்றி புகுத்தப் பட்டன. அவற்றின் விளைவுகளில் ஒன்றுதான் மாதப் பெயர்களும் வடமொழியாகிய நிலை. நாம் இனி தமிழை மீட்போம். தமிழராய் வாழ்வோம் வருக.

சனி, 7 நவம்பர், 2009

காற்பந்தா? கால் பந்தா? எது சரி ?

இரா.திருமாவளவன்

அண்மைக் காலமாக நம் அறிஞர்கள் சிலர் தமிழ்ச் சொற்றடர்களில் புணரியல் திருத்தங்களைச் செய்து வருகின்றனர். இவற்றுள் ஏற்புடையனவும் உள; ஏற்றுக் கொள்ள முடியாதவையும் உள.

அவரவர் மனப் போக்கில் செய்யப்படும் விதி ஆக்கங்களால் தமிழ் இலக்கண அமைப்பு சீர்கெடும் நிலை ஏற்படும்.

நெடில் அடுத்த லகர ளகர வீறு 'கள்' விகுதி சேருங் காலைத் திரியாது எனும் விதி தற்கால் பலராலும் ஏற்றுக் கொள்ளப் பட்ட ஒன்றாகி விட்டது.

  • நாள் + கள் = நாள்கள்
  • கால் + கள் = கால்கள்
  • கோள் + கள் = கோள்கள்
  • வேல் + கள் = வேல்கள்
  • தாள் + கள் = தாள்கள்
இவ்விதி இக்கால், 'கள்' விகுதி என்ற நிலையினின்றும் நீண்டு ஏனைய வருமொழிகளுக்கும் பொருந்தும் எனும் பொருளில் முனைவர் தமிழண்ணல் அவர்கள் கருத்து வெளியிட்டிருந்தார். இது தமிழ் நேசன் நாளிதழில் முன் பக்கத்தில் கட்டம் போட்டு வெளியிடப்பெற்றது.

இவ்விதியின் படி கால் + பந்து = கால்பந்து என்றே எழுதப் பெறல் வேண்டும். இவ்வாறு எழுதுவதும் பேசுவதும் ஏற்புடையதுதானா என்பதே நம் ஆய்வு.

இதற்கு நடைமுறையிலுள்ள பல எடுத்துக்காட்டுகளைக் காண்பது நன்று.

  1. மேல் + கணக்கு
  2. கால் + கடுக்க
  3. பால் + பசு
  4. நாள் + கோள்
  5. பால் + பழம்
  6. கால் + சட்டை
  7. மேல் + படிப்பு
  8. கால் + புள்ளி
  9. கால் + பந்து
  10. நூல் + பா
  11. மேல் + கொண்டு
  12. பால் + குடம்
இவற்றுள் திரிவனவும் திரியாதனவும் உள. எல்லா இடங்களிலும் லகர ளகர வீறு வரும் மொழி க ச ப முன் திரியா என்பது தவறு. எங்குத் திரியும் எங்குத் திரியாது என்பதை இக்கால் பார்ப்போம்.

இதற்குத் தமிழில் காணப்படும் தொடர் வகைகளை அறிந்திருப்பது இன்றியமையாதது. தொடர் என்பது தொகை நிலைத் தொடர் என்றும் தொகா நிலைத் தொடர் என்றும் இருவகைப் படும். தொகை எனின் மறைந்திருப்பது என்று பொருள். தொகைநிலைத் தொடர்களுள்

  • வேற்றுமைத் தொகை
  • உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை
  • உம்மைத் தொகை
  • வினைத் தொகை
  • பண்புத்தொகை
  • இருபெயரொட்டுப் பண்புத் தொகை
  • அன்மொழித்தொகை
வலிமிகும் மிகா இடங்களுக்கு எவ்வாறு இத்தொகை நிலைகள் முகாமையானவையாக விளங்குகின்றனவோ அவ்வாறே லகர ளகர வீறு புணரியலுக்கும் முகாமையானவையாக விளங்குகின்றன.

இவ்வகையில் இரண்டாம் வேற்றுமை உருபு தொகையிலும் வினைத் தொகையிலும் லகர ளகர வீறு திரியாது. ஏனையவற்றுள் திரியும்.

எடுத்துக் காட்டு:

௧. கொல் + களிறு = கொல்களிறு (கொல்லும், கொல்கின்ற, கொன்ற என்பவற்றின் தொகையே கொல்) இது வினைத் தொகையாகும்.

௨. நாள் + கோள் = நாள்கோள் நாளும்கோளும் என்பதே உம்மைத் தொகையாக நாள்கோள் என ஆகியிருக்கின்றது. இங்கு 'ள்" ட் ஆகத் திரியாது.

௩. பால் + பழம் என்பதும் பால்பழம் என்றே புணரும். இதுவும் உம்மைத் தொகையாகும். இதன் விரி பாலும் பழமும். பாற்பழம் என்று எழுதினால் பால் போன்ற பழம் எனப் பொருள்பட்டு உவமைத்தொகையாகி விடும்

௪. பால் + குடித்தான் என்பது பால் குடித்தான் என்றே புணர வேண்டும். இது இரண்டாம் வேற்றுமை உருபுத் தொகையாகும். பாலைக் குடித்தான் என்பது இதன் விரி.

௫. எழுவாய்த் தொடர்களிலும் திரியாது கால் கடுத்தது, தோள் புடைத்தது, வேல் பாய்ந்தது என்றே இயல்பாகப் புணரும்.

இனித் திரியும் இடங்கள் சிலவற்றைக் காண்போம்.

௧. கால் + சட்டை = காலில் அணியப் படும் சட்டை எனும் உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையாகும். இல் எனும் வேற்றுமை உருபும் அணியப்படும் எனும் பயனும் தொக்கி வருவதால் லகர வீறு திரிந்து காற்சட்டை என்றாகும்.

௨. பால் + பசு - பாலைத்தரும் பசு பாற்பசு என்றாகும்.

௩. மேல் + படிப்பு - மேற்படிப்பு
௪. மேல் + கொண்டு - மேற்கொண்டு
மேல் + சென்று - மேற்சென்று

தொடர்ந்து எனும் பொருளைக் குறிக்கும் மேல் திரிந்தே புணரும்.

௪. கால் எனும் பகுதியைக் குறிக்கும் பின்னத்தின் பின் திரியும்.

கால் + புள்ளி = காற்புள்ளி என்றாகும்.

௫. நூலின் நுட்பத்தைக் குறிக்கும் பா
நூல் + பா = நூற்பா என்றாகும். இது உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையாகும்.

௬. பாலைக் கொண்டிருக்கும் குடம் பாற்குடமாகும். இதுவும் உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையே. பால் குடம் என்று எழுதினால் பாலும் குடமும் எனப் பொருளாகிவிடும்.

இந்நிலையில் ,

கால் + பந்து எனும் மொழிப் புணர்ச்சியில் லகர வீறு திரியுமா? திரியாதா?

இங்கு வரும் கால் உறுப்பைக் குறித்ததா? பகுதியைக் குறித்ததா? இந்தப் பந்திற்கு ஏன் இப்பெயர் இடப்பெற்றது. கையால் தட்டப்படும் பந்து கைப்பந்தாகும். வலையில் போடப்படும் பந்து வலைப் பந்தாகும். மேசையில் ஆடப்படும் பந்து மேசைப் பந்தாகும். பூப் போன்றிருக்கும் பந்து பூப்பந்தாகும். அது போல காலால் உதைக்கப் படும் பந்தே கால் + பந்து . இது உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையாதலால் நிலை மொழியில் லகரவீறு திரிதலே சரி. கால் + பந்து = காற்பந்து என்றே எழுதப்படவும் சொல்லப்படவும் வேண்டும். இப்படித்தான் நீண்ட காலமாக வழக்கிலிருந்தது . இடையில் சிலர் ஏற்படுத்திய குழப்பத்தால் பலரும் குழம்பியுள்ளனர்.

காற்பந்தை கால் பந்து என்று எழுதினால் வேல் கம்பு , நாள் கோள், பால் பழம் போல் உம்மைத் தொகையாகி காலும் பந்தும் என்று பொருள்பட்டு விடும். எனவே காற்பந்து என்பதே இலக்கண விதிப் படி சரியானதாகும்.

புதன், 4 நவம்பர், 2009

தமிழில் கலந்துள்ள பிறமொழிச் சொற்களை அடையாளம் காண்பது எப்படி?

வினா : தமிழில் கலந்துள்ள சில பிறமொழிச் சொற்களைப் பிரித்தறிய முடிவதில்லை. இதனைப் பகுத்தறிந்து கொள்வது எப்படி?

விளக்கம் : மிக நீண்ட காலமாகத் தமிழில் கலந்திருக்கின்ற சொற்களையே பிரித்தறிய முடியாத சிக்கல் புதியவர்களுக்கு ஏற்படலாம். அயல் சொற்கள் எண்ணெயும் நீரும் போல தனித்தனியே கிடப்பன. அவற்றைப் பிற மொழிச் சொற்கள் என எளிதில் அறிந்து கொள்ளலாம்.

ஆனால் தமிழ் போல மயங்கப் படும் வடமொழிச் சொற்களை இவ்வாறு பிரித்தறிவது சற்றுக் கடினந்தான். இதனையும் நிறைந்த நூல் பயிற்சியின் வாயிலாகவும் ஈடுபாட்டின் வாயிலாகவும் தெரிந்து கொள்ளலாம்.

தனித்தமிழ் அறிஞர்கள் மறைமலை அடிகள், பாவாணர், பெருஞ்சித்திரனார் முதலானோர் எழுதிய நூல்கள் பலவற்றைப் படிக்கின்ற பழக்கம் வேண்டும். பிறமொழிச் சொற்கள் தமிழ் ஒலிப்பு முறையில் வேறுபட்டிருக்கும். வடமொழி கிரந்த வடிவங்களைப் பெற்றிருக்கும். சிலவன தமிழிலிருந்து பிரிந்து திரிபுற்றனவாக இருக்கும். அயற்சொல் விளக்க தமிழ் அகர முதலிகளைக் காணின் நலம் பயக்கும் . தமிழூர் ப. அருளி, நீலாம்பிகை அம்மையார் முதலானோரின் அகர முதலிகளைக் காண்க.

எடுத்துக் காட்டாகச் சில :

அயற்சொல் தமிழ்ச்சொல்

  • லாபம் - ஈட்டம்
  • புஷ்பம் - பூ
  • பிரதேசம் - பைதிரம்
  • ஜனாதிபதி - அதிபர்
  • ராஜா - அரசன்
  • ஷர்பம்- பாம்பு
  • பகிஷ்கரிப்பு - புறக்கணிப்பு
  • ஸம்ஸாரம் - மனைவி
  • ஜலம்- நீர்


இரா.திருமாவளவன்


தொடரும்

செவ்வாய், 3 நவம்பர், 2009

என்னே! தமிழ் இளமை என்னே!

-மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்-

என்னே! தமிழ் இளமை என்னே! - அதற்
கீடான தொன்றில்லையே - இதை
மறுப்பாருண்டோ என்றும் மறைப்பாருண்டோ - எதிர்
மாற்றாரும் மறப்பாருண்டோ (என்னே)

முதன்மாந்த ரொடுதோன்றி
முதிதாயினும் - மக
மொழியாவும் பலவாகக்
கிளை போயினும்
இதுபோதும் முன்போல் மெல்
லியல்தாங்கியே
இளஞ்சேயர் பிணியார்வாய்
எளிதாகவே (என்னே )

இலத்தீனம் வடநாவல்
மறை யாரியம்
ஏராளம் துணைகொண்டும்
இழவானவே
இனத்தாரும் வேற்றாரும்
நெடுங்காலமாய்
எதிர்த்தேதீங் கிழைத்தாலும்
இருக்கும் தமிழே! (என்னே )

'கண்ணா கருமை நிறக் கண்ணா ' என்ற மெட்டு

தனித்தமிழியம் வலைப்பூ உலகத்தில் ஒரு புதிய வரவு

தனித்தமிழியம் வலைப்பூ உலகத்தில் ஒரு புதிய வரவு
தனித்தமிழியம் என்றாலும் தமிழியம் என்றாலும் ஒன்றே! இருப்பினும் செந்தமிழ் வண்டமிழ் தண்டமிழ் ஒண்டமிழ் என்று கூறுமாறு போல தமிழியத்தின் சிறப்பே தனித்தமிழியமாம்.
சிலருக்குத் தனித்தமிழ் என்றாலே வேம்பாய்க் கசக்கும். பிறமொழி சொற்கலந்து எழுதுதல் அவர்களுக்கு இனிக்கும். தமிழருள்ளும் இத்தகையார் சிலர் உளர். இத்தகையார் செய்த தகிடு தத்தங்கள் பல. தமிழர் அல்லாராலும், தமிழுரு போர்த்திய புல்லுருவியராலும் தமிழ்ப் பகைவராலும் தமிழுக்கும் தமிழர்க்கும் ஏற்பட்ட கேடுகள் பற்பல. அவற்றையெல்லாம் தவிடு பொடியாக்கி தனித்தமிழியம் வென்று வருகின்றது. மறைமலை அடிகளார், மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், பெருஞ்சித்திரனார் போன்றோர் ஆற்றிய அரிய செயல்களால் உலகம் தழுவிய பேரியக்கமாய் தனித்தமிழியம் விரிந்துள்ளது. அதன் முந்தைய வரலாற்றையும் இன்றைய விரிவையும் இவ்வலைத்தளத்தில் தொடர்ந்து காண்போம் வருக.
அன்புடன்
இரா.திருமாவளவன்